Wednesday, March 12, 2008

ssss

Blogroll
+: etcetera :+
=விடை தேடும் வினா?
அகத்தீடு
அட்டவணை
அயில்வார்நஞ்சை
அரசியல்வாதி
அரவாணி
அரிச்சந்திரன்
அலைபாயுதே
ஆகாசவாணி
ஆங்கிலேயன்
ஆஞ்ஞானம்
இங்கிலாந்து
இதழ்
இத்யாதி
இந்தியன்
இன்று
இலக்கியன்
இலம்பகம்
ஈழத்தமிழன்
ஈழம்
உக்கடத்துப் பப்படம்
உங்க ஏரியா
உபன்யாசி
உப்புமா
உருப்படாதவன்
உருப்படி
உலா வரும் ஒளிக்கதிர்
உலோட்டி
உஷ்ணவாயு
ஊர்சுற்றி
எங்க ஏரியா
எம்டன்
எழுத்து
ஒன்றுமில்லை
கடலை
கடி
கடிகையார்
கனடா
கனிமொழி
கப்பி
கரிப்புறத்திணை
கருத்து
கறுப்பி
கலகக்காரன்
கலம்பகம்
கலாம்
கவிஞர்
காக்டெயில்
காஞ்சி
கானா
காபி பேஸ்ட்
கார்காரர்
குசும்பன்
குப்பை
கென்
கேமிரா கண்ணாயிரம்
கைக்குள் பிரபஞ்சம்
கைமண்
கொலம்போ
கோமாளி
கோலு
சந்தக்கட செல்லாயி
சன்னாசி
சரக்கு
சரம்
சரஸ்வதி
சர்வே-சன்
சற்குரு
சாட்டான்
சாம்பார் மாஃபியா
சிந்தனாவாதி
சினிமாகாரன்
சின்ன கிறுக்கல்
சிவியார்
சுட்டன்
சுண்டல்
சுருணை
சுவரோவியன்
சென்னைவாசி
சேவகி
சோடா பாட்டில்
ஜெத்மலானி
ஜெயமோகன்
டாக்டர்
டாலர்வாசி
டிசே தமிழன்
டின்னர்
டுபுக்கு
டூப்புடு
டைரி
தபால்
தமிழ் செய்திகள்
தம்பி
தல
திரித்தல்
துட்டு
துள்ளி
தேனிக்காரன்
தொட்டி
தோட்டக்காரன்
நகரம்
நல்ல பையன்
நா காக்க
நாதன்
நார்வே
நிஜம்
நிதர்சனம்
நியூஸிலாந்து
நிலம்
நீதிபதி
நேரடி
நேஹா
பட்டணம் பொடி
பண்டிட்ஜி
பண்ணையார்
பயணி
பல-ராமன்
பாசமுள்ள பாண்டியன்
பாட்டாளி

Friday, January 18, 2008

திருவண்ணாமலை திருவூடல் திருவிழா

பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க அண்ணாமலையார் கிரிவலம்
திருவண்ணாமலை: பிருங்கி மகரிஷிக்கு அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து காட்சியளித்தார்.சிவ பக்தரான பிருங்கி மகரிஷிக்கு ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து காட்சி கொடுப்பார். நேற்று முன்தினம் இரவு அண்ணாமலையார் தனியாக கிரிவலம் செல்லும் போது பராசக்தி அம்மனுக்கு கோபம் ஏற்பட்டு ஊடல் ஏற்பட்டு அதை சமாதானம் செய்யும் தூதுவராக சுந்தரர் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் இரவு கிரிவலப்பாதையில் உள்ள குமரக்கோயிலில் அருணாசலேஸ்வரர் தங்கி, நேற்று பகலில் கிரிவலம் வந்து அடி அண்ணாமலையில் பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்தார். பின் அருணாசலேஸ்வரர் கோயில் திரும்பும்போது, பராசக்தி அம்மனால் ஏவப்பட்ட மாயையினால் அவர் அணிந்திருந்த நகையை பறிகொடுக்கும் நிகழ்ச்சியும், அதனால் அவர் வெற்றுடம்பாக கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து அருணாசலேஸ்வரர் திருநடனம் ஆடும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து கூடல் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் பராசக்தி அம்மனுடன் எழுந்தருவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Monday, November 5, 2007

முதல் வலைப்பதிவு

http://kasilingam.com/

நம் முதல் வலைப்பதிவு
நம் முதல் வேலை, ப்லாக்கர்.காம் இணையத்தளத்தில் நமக்கு ஒரு கணக்கு (account) துவங்குவது. யாஹூ போன்ற மின்னஞ்சல் சேவைகளில் துவக்கியிருப்போமே, அதுபோலத்தான். சொல்லப்போனால் இது அதைவிடவும் மிக எளிமையானது. அங்காவது ஊர், உறவு விபரமெல்லாம் கேட்பார்கள், இங்கே எதுவும் இல்லை. நமக்குத் தேவையெல்லாம் ஏற்கனவே நாம் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டுமே. அத்துடன், ப்லாக்கர்.காம் தளத்துக்கு நாம் ஒரு ‘பயனர்-பெயர்’ தெரிவுசெய்துகொள்ளவேண்டும். சரி ஆரம்பிக்கலாமா? அதற்குமுன், உங்கள் கணினியில் எ-கலப்பை இயங்கிக்கொண்டிருக்கட்டும், இணையத்தொடர்பு ஏற்படுத்தப் பட்டிருக்கட்டும். (இங்கே கீழே உள்ள படங்களை இன்னும் தெளிவாக, பெரிதாய்ப் பார்க்க வேண்டும் என்றால், அவற்றின் மேல் சொடுக்குங்கள்.)

நான் என் பயனர்-பெயராக kasiblog என்பதைப் பயன்படுத்தப் போகிறேன். முதலில் இணைய உலாவி(internet browser)யில{{http://www.blogger.com/}}க்குப்போய் CREATE YOUR OWN BLOG என்பதற்குக் கீழ் உள்ள Start Now! என்ற பொத்தானை சொடுக்குவோம். அது நம்மை கணக்குத் துவங்கும் படிவத்துக்கு இட்டுச்செல்கிறது.


அங்கே நாம் தெரிவுசெய்து வைத்துள்ள பயனர்-பெயர், மற்றும் நம் விபரங்களை இடுகிறோம். பிறகு ஒரு கடவுச்சொல்லை(paasword)யும் தெரிவுசெய்கிறோம். அங்கு ப்லாக்கர்.காம் தளத்தின் விதிமுறைகளை கடைப்பிடிப்பதாக ஒத்துக் கொண்டு குறியும் இடுகிறோம். பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்ல next பொத்தானைச் சொடுக்குகிறோம். அது நம்மைப் புதிய வலைப்பதிவு துவங்கும் படிக்கு கூட்டிப் போகிறது,


1. இங்கே தான் நம் வலைப்பதிவின் பெயர், மற்றும் வலைப்பதிவின் விபரம் ஆகியவற்றை இடுகிறோம். உலாவியில் view→encoding→Unicode(utf-8) என்று தெரிவு செய்து கொண்டு, எ-கலப்பையில் alt+2 தேரிவுசெய்வதன்மூலம் நம்மால் இந்த விபரங்களைத் தமிழிலேயே உள்ளிடமுடியும். படத்தில் பாருங்கள் நான் செய்ததை. இங்கு இன்னொன்று: நம் வலைப்பதிவை பொதுப் பட்டியலில் வெளியிடலாமா என்று கேட்கப்படும் கேள்விக்கு ‘ஆம்’ என்றும் தெரிவு செய்வோம். அடுத்த கட்டம்…


2. இனி, நாம் செய்யப்போகும் வலைப்பதிவை எந்த இணையத்தளத்தில் வாயிலாகப் பதிப்பிக்கப்போகிறோம் என்று சொல்ல வேண்டும். இப்போதைக்கு நாம் ப்லாக்கர்.காம் இலவசமாக அளிக்கக்கூடிய ப்லாக்ஸ்பாட்.காம்(blogspot.com)மையே பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம். எனவே அதையே தெரிவுசெய்யலாம்.


3. இங்குதான் நம் வலைப்பதிவின் உரல் (URL) என்னவென்பதைத் தெரிவுசெய்யப் போகிறோம். இந்த உரல் தனித்துவத்துடன் இருக்கவேண்டுமாதலால், நாம் தெரிவுசெய்தது ஏற்கனவே பயனில் இல்லாமல் இருக்கவேண்டும். நான் ulmanam என்று தெரிவுசெய்கிறேன். இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டியிருப்பதால், இங்கே எ-கலப்பையில் alt+1 தெரிவு செய்யவேண்டியிருக்கும். மீண்டும் விதிமுறைகளை ஒத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்குப் போகலாம்.



4. அப்பாடா! ulmanam.blogspot.com இன்னும் யாராலும் எடுத்துக்கொள்ளப் படாததால், எனக்குக் கிடைத்துவிட்டது! இல்லாவிட்டால் வேறு எடுக்கச் சொல்லும். என்ன, நீங்களும் உங்கள் விபரங்களைக்கொண்டு இதெல்லாம் கூடவே செய்துகொண்டு வருகிறீர்கள்தானே? இப்போது, நம் வலைப்பதிவின் தோற்றம் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தெரிவுசெய்யலாம். நான் எனக்குப் பிடித்த ஒன்றை ‘Use this’ என்று சுட்டிக் காட்டுகிறேன். இனி அடுத்த கட்டம்…


அட! அவ்வளவுதான். இதோ ‘உங்கள் வலைப்பதிவை உருவாக்குகிறேன்’ என்று ஒரு அறிவிப்பு வந்த சில நொடிகளில்…


இடுகைகளை உள்ளிடும் சன்னலுக்கு நம்மை அழைத்துப் போகிறது. இதோ நம் முதல் இடுகையை தட்டச்சு செய்யலாமா? இன்னுமொருமுறை எ-கலப்பையில் alt+2 தெரிவுசெய்துகொண்டு, நாம் எழுத ஆரம்பிக்கலாம். முதல் இடுகை சிறிய அறிமுக இடுகையாக இருக்கட்டுமே. சில வரிகளுக்குள் முடித்துக்கொண்டு, முன்பார்வையிட வேண்டி Preview Your Post என்ற பொத்தானை சொடுக்கலாம்.


ஆகா! நன்றாக வந்திருக்கிறதே! ஏதும் எழுத்துப்பிழை இருந்தாலோ, நமக்கு ஏதும் மாற்றம் வேண்டுவதாய் இருந்தாலோ, மறுபடியும் மாற்றவும் வழி இருக்கிறது. திருப்தியாக இருந்தால், Publish your post பொத்தானை சொடுக்கி பதிப்பிக்கலாம்.


இதோ, பதிப்பித்தல் வெற்றி என்று சொல்கிறது. அத்துடனே, நம் புதுக்குழந்தையை நேரடியாகப் பார்த்து உச்சி மோர இங்கேயே ஒரு தொடுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதோ view blog என்ற சுட்டியை சொடுக்கலாம்.


இப்போது, புதிய சன்னலில் நம் வலைப்பதிவு காணக்கிடைக்கிறது. இப்போது நாம் காணும் இதே வடிவம், உலகம் முழுக்க எங்கிருந்தும் காணக்கூடியதாகும். உலாவியின் முகவரிக்கட்டத்தில் நம் வலைப்பதிவின் முகவரி இருப்பதைப் பார்க்கலாம். இங்கே http://ulmanam.blogspot.com என்று இருக்கிறது. உங்கள் உலாவியில், நீங்கள் தெரிவுசெய்தபடி இருக்கும். இந்த முகவரிதான் இனி உங்கள் அடையாளம். இதை நீங்கள் நகலெடுத்து உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். மற்ற தமிழ் வலைப்பதிவுகள் பட்டியலில் சேர்க்கலாம். இன்னும் என்ன என்னவெல்லாமோ செய்யலாம்.

இந்த பல படிகளில் சிலசமயம் விண்டோஸ்98 வகைக் கணினிகள் வைத்திருப்பவர்களுக்கு சில பிரச்னைகள் வரலாம். அவற்றை தனியாகப் பார்க்கலாம். இனிமேல், புது விஷயங்களை இடுவதானால், ப்லாக்கர்.காம் தளத்திற்குப் போய் நம் பயனர்-பெயரையும், கடவுச்சொல்லையும் இட்டு வேண்டியதைச் செய்யலாம். அடுத்த பாகம் வரை நிறைய எழுதுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சில நண்பர்கள், ‘என்ன உன் எழுத்து கட்டம் கட்டமாகத் தெரிகிறதே, படிக்கமுடியவில்லையே’ என்று சொல்லலாம். அசந்துவிடாதீர்கள்:) அதை எப்படி சமாளிக்கலாம் என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்!

-இன்னும் வரும்.

முகப்புப் பக்கத்துக்கு மீள... | அடுத்த பாகத்துக்குச் செல்ல...


e-sangamam_5.txt · Last modified: 2006/09/09 09:14

பாகம் 3.

ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்
முந்தைய பாகங்களில் வலைப்பதிவு எதற்கு என்பதையும், வலைப்பதிவு சம்பந்தப்பட்ட சில முக்கியக் கேள்விகளுக்கு விடையையும் பார்த்தோம். வலைப்பதிவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் சில சுட்டிகள் கொடுத்திருந்தோம், அவற்றிலும் சிலவாவது சென்று பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆக, வலைப்பதிக்கவேண்டும் என்று நீங்கள் தயாராகியிருப்பீர்கள்.

நமக்காக நாமே ஒரு வலைப்பதிவு உருவாக்கப் போகிறோம். அதன் முதல் படியாக வாசகர் பார்வையிலிருந்து ஒரு வலைப்பதிவின் முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்று காணலாம். பின்னால் நாம் சில பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது குழப்பம் எதுவும் வராமல் இருக்கவும் இந்த விளக்கம் அவசியம். இதோ ஒரு எளிமையான வலைப்பதிவின் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிப்போமா?

கீழே உள்ள படத்தின் உள்ள எண்களின்மேல் அல்லது முக்கியப்பகுதிகளின்மேல் சொடுக்கினால் அதைப் பற்றிய விளக்கத்தை அறியலாம்.


இனி இந்தப் படத்தில் குறிக்கப்பட்ட ஒவ்வொரு பாகத்தின் தேவையையும் அவற்றின் விளக்கங்களையும் பார்க்கலாம். கூடவே ஆங்கிலப்பெயர்களையும் பயன்படுத்தலாம். ஏனென்றால், இன்றைக்கு இலவச வலைப்பதிவு சேவை அளிப்போர், வலைப்பதிவை உருவாக்கவும் மேலாளவும் இன்னும் தமிழ் இடைமுகத்தை (interface) அளிப்பதில்லை. இந்த வேலைகள் செய்யத்தேவையான ஆங்கில அறிவு கொஞ்சமே, அது இன்று தமிழறிவைவிட நம் மக்களிடம் அதிகமாகவே இருப்பதால், இது ஒரு பிரச்னையில்லை!


--------------------------------------------------------------------------------

1. வலைப்பதிவின் பெயர் (Title):

ஒவ்வொரு வார இதழ், இணைய இதழ், புத்தகம் எல்லாவற்றையும் போல நம் வலைப்பதிவிற்கு இதுவே அடையாளம். சிலர் தன் பெயரிலேயே தன் வலைப்பதிவையும் வைத்திருக்கிறார்கள். சிலர் எண்ணங்கள், கிறுக்கல்கள், சிந்தனைகள் என்று வைக்கிறார்கள். நம் கற்பனைக்குதிரையை இங்கிருந்தே ஓட்ட ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும் நல்ல தமிழ்ப்பெயராக வைத்துக்கொள்ளுவது நல்லது. இது என் தனிப்பட்ட ஆலோசனை. அவரவர் விருப்பம் அதுவென்றால் தங்கிலீஷ் அல்லது இங்கிலீஷில் வேண்டுமானாலும் வைக்கலாம்!

உதாரணத்துக்கு ஏற்கனவே உள்ள சில பெயர்கள் இங்கே:

சுவடுகள் கண்டதைச் சொல்கிறேன் இட்லிவடை


--------------------------------------------------------------------------------

2. வலைப்பதிவைப்பற்றிய விபரம்(Description):

ஒரு வலைப்பதிவர் தன்னைப்பற்றி அல்லது இங்கு எதைப்பற்றியெல்லாம் எழுதப்படும் என்பது பற்றி இங்கு குறிக்கலாம். இது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பகுதி. அவரவர் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், புதிதாக வலைப்பதிவுக்கு வருகைதரும் ஒரு வாசகருக்கு இங்குதான் அந்த வலைப்பதிவைப்பற்றிய முதல் அபிப்ராயம், உருவம் கிடைக்கப் போகிறது. அது நல்லதாக, உண்மையாக, தெளிவாக இருக்கும்படி இருக்க வேண்டும். இது ஓரிரு சொற்றொடர்களில் இருத்தல் நலம்.

உதாரணங்கள்:
ஒரு நாடோடியின் வடதுருவ வலைக்குறிப்புகள் சிந்தித்ததைச் சேமிக்கிறேன் சந்திரமதி கந்தசாமியின் எழுத்துப்பயிற்சிக் கூடம்

மேலே கண்ட இரண்டும் ஒரு வலைப்பதிவின் முகப்பில் இருக்கும் நிலையான அம்சங்கள். இது போல இன்னும் இரு நிலையான பகுதிகள் பொதுவாக ஒரு வலைப்பதிவில் காணப்படும். அவை என்ன என்று அடுத்துக் காண்போம்.


--------------------------------------------------------------------------------

3. முந்தையவை (Archives):

நாம் முன்னமே பார்த்ததுபோல, ஒரு வலைப்பதிவு தொடர்ந்து புதிய எழுத்துக்களால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கப்படும் ஒன்றுதானே. எனவே முகப்புப் பக்கத்திலேயே இதுவரை ஒருவர் எழுதிய அனைத்தையும் காட்டினால் எப்படி இருக்கும்? பார்ப்பவர்கள் இது என்னடா சோதனை என்று எண்ண மாட்டார்களா? உதாரணமாக ஒரு ஐம்பது விஷயங்களை ஒருவர் இதுவரை எழுதியிருந்தால் அந்த ஐம்பதும் முன்பக்கத்தில் காட்டப்படுவதில்லை. கடைசியாக எழுதப்பட்ட விஷயம் முதலில் வரும்படிதான் பொதுவாக வலைப்பதிவுகள் அமைக்கப்பட்டிருக்கும். அத்தோடு முகப்புப் பக்கத்தில் எத்தனை விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதை நாம் வலைப்பதிவின் அமைப்பு விவரங்களை மேலாண்மை செய்யும்போது வரையறுத்துவிடலாம்.

இப்படி வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை விஷயங்கள் தவிர, அதற்குமுன் எழுதப்பட்டவற்றை தானாகவே வாரவாரியாகவோ, மாதவாரியாகவோ கோர்த்து, அவற்றைத் தனியான வலைப்பக்கங்களாக்கி, அவற்றுக்கு சுட்டிகளும் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இதையெல்லாம் பொறுமையாகச் செய்வது? அந்தக் கவலையே நமக்கு வேண்டாம். எல்லாவற்றையும் வலைப்பதிவுச்சேவையே பார்த்துக்கொள்ளூம். இதுவும் வலைப்பதிவை வலைத்தளங்களிலிருந்து வேறுபடுத்தும் பல அம்சங்களில் ஒன்று.


--------------------------------------------------------------------------------

4. இணைப்புகள் (Links): ]

அடுத்த முக்கியமான பாகம் இது. ஒவ்வொரு வலைப்பதிவும் தனித்து சுயேச்சையாய் இயங்குவதில்லை. இணையமே ஒரு மிகப்பெரும் கூட்டுறவு அமைப்புத்தானே. அதே கருத்தில் ஒவ்வொரு வலைப்பதிவரும், தங்களுக்கு விருப்பமான, தங்கள் வாசகருக்குப் பயனாகக்கூடிய வேறு இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது வழக்கம். இது முழுக்க முழுக்க ஒருவலைப்பதிவரின் விருப்பமே. நம் நண்பர்களின் வலைப்பதிவுகள், தமிழ் மென்பொருள்/எழுத்து உதவி சம்பந்தமான தளங்கள், வலைப்பதிவுகளின் சஞ்சிகை, பட்டியல் போன்றவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது நல்லது.

இதுவரை பார்த்தவை ஒரு வலைப்பதிவின் நிலையான அம்சங்கள். இனி வரப்போவது மாறும் அம்சங்கள்.


--------------------------------------------------------------------------------

5. இடுகை (Post or Entry):

இதுதான் ஒருவர் எழுதிக்குவிப்பது. ஒவ்வொரு முறையும் அவர் எழுதிப் பதிப்பிக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு இடுகை (இடப்படுவது, one that is posted) எனலாம். சாதாரணமாக ஒரு இடுகை ஒரு வரியிலிருந்து, சில 100 வரிகள் வரை இருக்கலாம். தினமும், அல்லது சில நாட்களுக்கு ஒருமுறை இடப்படுவதாயின், 100 வரிகளுக்கும் மிகாமல் இருந்தால் வாசிப்பவர்களுக்கு ஆர்வக்குறைவில்லாமல் இருக்கும். இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அவரவர் விரும்பியதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பதிப்பிப்பதுதானே வலைப்பதிவின் மையக்குறிக்கோள், எனவே இதன் நீளம் நம் விருப்பம். இடுகைகள் வெறும் கட்டுரைகளாக இல்லாமல், சுட்டிகள், படங்கள், பட்டியல்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்தாலே இணையத் தொழில்நுட்பத்தின் முழுவீச்சினையும் பயன்படுத்தியதாக ஆகும். இவை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை, பின் வரும் பாகங்களில் விளக்கமாகப் பார்க்கலாம்.


--------------------------------------------------------------------------------

6. இடுகையின் தலைப்பு (Title of the Post):

இதைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வோரு இடுகைக்கும் ஒரு அர்த்தமுள்ள தலைப்பிடுவது, வாசிப்பவருக்கு மிகவும் பயனுள்ளது. தங்கள் நேரத்தை ஒருவர் செலவிடும் முன் அது தேவைதானா என்பதை இதை வைத்து முடிவுசெய்ய முடியும். சில விசேஷக் குறிக்கோள்களுடன் இயங்கும் வலைப்பதிவுகள், தலைப்பில்லா இடுகைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் அது அவ்வளவு விரும்பத் தகுந்ததல்ல.


--------------------------------------------------------------------------------

7. இட்டவர் பெயர், மற்றும் நேர முத்திரை? (author and Time-stamp)):

பலரும் எழுதும் வலைப்பதிவுகளில் இந்த விபரங்கள் முக்கியமாகத் தேவை. உதாரணம், வலைப்பூ (http://valaippoo.yarl.net/). ஒருவர் மட்டும் எழுதும் வலைப்பதிவுகளில் யாரால் எழுதப்பட்டது என்பது பெரிய தகவல் அல்ல. ஒரு நாளைக்குப் பலமுறை எழுதப்படும் வலைப்பதிவுகளில் ஒவ்வொரு இடுகையும் எந்த நேரத்தில் இடப்பட்டது என்பதைக்குறிக்கும் நேரமுத்திரை முக்கியமானது. மற்றபடி இந்தத்தகவல்கள் பெரிய முக்கியத்துவம் இல்லாதவையே. ஆனாலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகள், இந்த விவரத்தையும் தானாகவே காட்டும்படி அமைக்கப்பட்டே வருகின்றன.


--------------------------------------------------------------------------------

8. நாள் முத்திரை (Date-line):

இதுவும் தானாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஒரே நாளில் பல இடுகைகள் இருந்தால் அவையனைத்தும் இந்த நாள் முத்திரைக்குக் கீழ் காட்டப்படும். ஒரு இடுகை என்று எழுதப்பட்டது என்ற விவரம் பலசமயம் முக்கியமான ஒன்று. அதிலும் தினமும் புதுப்புது விஷயங்களை எழுதும்போது, பல நாள் கழித்துப் பார்த்தால் அது என்று எழுதப்பட்டது என்பதை வைத்து அன்று நம் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்று அறியவும் இது பயனாகிறது.


--------------------------------------------------------------------------------

9. நிலையான புத்தக்கக்குறி (Permalink):

ஒருவர் தம் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒரு விஷயத்தை இன்னொருவருக்குச் சுட்ட விரும்புகிறார் எனக் கொள்வோம். அவர் வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் அந்த விஷயத்தைப் படித்து, அதே முகப்புப் பக்கத்தின் உரலை (URL) மின்னஞ்சல்மூலம் அனுப்புகிறார். அதைப் பெறுபவர், அந்த உரலை தன் உலாவியில் இட்டால் அதே பக்கம் அவரது கணினித்திரையிலும் தெரிகிறது. ஆனால் நாம் ஏற்கனவே கண்டபடி இன்று முகப்புப் பக்கத்தில் இருப்பது சில நாள் கழித்து ‘முந்தைய’ பக்கங்களில் ஏற்றப்பட்டுவிடும். புதிதாய் இடப்பட்டவை முகப்புப் பக்கத்தில் இருக்கும். எனவே அவர் தேடியது கிடைக்காமல் போகுமல்லவா? இந்தப் பிரச்னைக்கு விடைதான் இந்தப் புத்தக்கக்குறி. ஒவ்வொரு இடுகைக்கும், வலைப்பதிவுசேவையே ஒரு நிலையான உரலை அளிக்கும். அந்த உரல் வேண்டுவோர் இந்த புத்தக்ககுறியைச் சொடுக்கினால், உலாவியின் முகவரிக் கட்டத்தில் இப்போது முழு உரலும் தெரியும். இதை நகலெடுத்து இன்னொருவருக்கு அனுப்பினால், எத்தனை மாதங்கள் கழித்தும் அந்தக் குறிப்பிட்ட இடுகையை எட்டமுடியும்.

பெரும்பாலும் இது # குறியால் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் நாம் பிறகு நம் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.


--------------------------------------------------------------------------------

10. கருத்துக்கள் (Comments):

வலைப்பதிவின் இன்னொரு முக்கிய அம்சம், வாசிப்பவர் தன் கருத்தை உடனுக்குடன் பதிக்கும் வசதி. இது யாருடைய ஈடுபாடும் தேவையின்றி தானாக நடக்கும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக இதுவரை எத்தனை கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற விவரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இங்கே இருக்கும். அதைச் சொடுக்கினால், அது இருக்கும் கருத்துக்களைக் காட்டவும், மேலும் கருத்துக்களை இடவும் வசதியுள்ள சன்னலுக்கு அழைத்துச் செல்லும். மேலதிகமாக நிறைய வசதிகள் செய்ய தேவையும் வாய்ப்பும் உள்ள இடம் இந்த கருத்துப் பெட்டி. அதை பின் வரும் பாகங்களில் விபரமாகக் காணலாம்.


--------------------------------------------------------------------------------

அப்பாடா, ஒரு வறட்சியான கட்டத்தைத் தாண்டிவிட்டோம். ஆனால் இந்த விஷயங்களைப் பற்றி நம்மிடம் தெளிவு இல்லையென்றால் மேற்கொண்டு நாம் செய்யப்போகும் வேலைகளில் காலமும், உழைப்பும் வீணாகிவிடும், எனவே ஒருமுறைக்கு இருமுறை இவற்றைப் படித்து தெளிந்துகொள்வோம்.

இன்னொன்றையும் சொல்லலாம், மேலே கண்ட அமைப்புகள் ஒரு எளிமையான வலைப்பதிவின் அடையாளங்கள். இவற்றில் எதுவும் குறைந்தும் இருக்கலாம், அல்லது இன்னும் மேலதிகமாக வாக்குப்பெட்டி, அரட்டைப்பெட்டி, போன்ற பல கூடுதல் வசதிகளும் இருக்குமாறும் அமைக்கலாம். எல்லாமே அவரவர் விருப்பத்தைம், திறமையையும் பொறுத்தது.

அடுத்த பாகத்தில் இலவசமாகக் கிடைக்கும் வலைப்பதிவு சேவைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, தமிழில் எழுதத் தேவையான அடிப்படை மென்பொருட்கள் பற்றியும் காணலாம். -தொடரும்

முகப்புப் பக்கத்துக்கு மீள... | அடுத்த பாகத்துக்குச் செல்ல...

பாகம் 2.

இ-சங்கமம் தொடரின் முன்பதிப்பு
முதல் பாகத்தில் நமக்குத் தோன்றக்கூடிய கேள்விகள் என்று சிலதைப் பட்டியலிட்டோம். அவற்றுக்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

சிலர் சொந்தமாக வலைப்பக்கம் வைத்திருக்கிறார்களே, அதற்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஓரளவுக்கு கணினி அறிவு வேண்டும் என்றால், எந்த அளவுக்கு?


பெண்களே கோபப்படவேண்டாம், இது வெறும் நகைச்சுவைக்காக, இதுவே ஆணுக்கும் பொருந்தும்:)


இணையத்தில் உலாவுவதற்கு நமக்கெல்லாம் தெரியும். எழுத்தை வாசிக்கத் தெரிந்த எவரும், சில நிமிடப் பழக்கத்திலேயே இதைக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள். இந்த இணைய இதழை வாசித்துக்கொண்டிருப்பதே அத்தகைய ஒரு அறிவுநிலை. இதற்கு அடுத்த நிலையாக மின்னஞ்சல் கையாளுவதைச் சொல்லலாமா? இணையத்தில் உலாவத்தெரிந்த அனைவருமே இன்னும் சிறிது பழகிக்கொண்டு மின்னஞ்சல் சேவையைக் கையாளுகிறோம் அல்லவா? அதற்கு அடுத்த நிலையாக வலைப்பதிவைச் சொல்லலாம், அவ்வளவுதான். மேலதிகமாய் இன்னும் ஓரிரு புதிய விஷயங்களைப் புரிந்து கையாள ஆரம்பித்தால் வலைப்பதிவு நம் வசத்தில்.

இணையத்தில் சில நாட்களாகவாது மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தியிருந்தால் வலைப்பதிவுக்குத் தேவையான அறிவு உங்களுக்குத் இருக்கிறதென்று பொருள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? என் வலைப்பதிவை ஆரம்பிப்பதற்கு முதல் வாரம் வரை நான் அப்படித்தான் இருந்தேன். எனவே இது உண்மை என்று அடித்துச் சொல்கிறேன்.


தமிழில் தாளில் எழுதத் தெரியும். தட்டச்சு செய்யத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் தமிழ் கீபோர்ட், சாப்ட்வேர் எல்லாம் வேண்டுமே எங்கே போவது?

தட்டச்சு என்பதை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு முழுநேர எழுத்தாளர் ஒரு நாளைக்கு ஒரு ஐம்பது பக்கம் எழுதலாம். ஒரு அலுவலகத் தட்டச்சர் ஒரு நாளைக்கு இருபது கடிதங்களை தட்டச்சு செய்யலாம். ஆனால் ஒரு வலைப்பதிவர் மிஞ்சிப்போனால் ஒரு பக்கம், இரண்டு பக்கம் செய்யவேண்டியிருக்கலாம். இதற்கு பெரிய தட்டச்சுத் ‘திறமை’ வேண்டியதில்லை.

மின்னஞ்சல் கையாளும் நாம் அனைவரும் அறிந்த ஒரு அடிப்படை உண்மை, மின் வடிவங்களில் இருக்கும் ‘திருத்தி எழுதும்’ வசதி. ஒரு தட்டச்சு இயந்திரத்தில் இருப்பதைப்போல அடித்த எழுத்தை ரப்பரைக் கொண்டு அழிப்பதில்லை நாம். அதே வழியில், தமிழில் கணினிமூலம் எழுதும்போதும் கண்முன்னே தவறு தெரிந்தால் திருத்தி அடித்துக்கொள்ளப் போகிறோம், இது என்ன தலையெழுத்தா மாற்ற முடியாமல் போவதற்கு? தமிழார்வமும், கணினி நுட்பமும் அறிந்த ஆர்வலர்கள் பலர் நமக்காக, தேவையான எல்லா மென்பொருட்களையும் இலவசமாக அளிக்கிறார்கள். நம் ஆர்வமும், ஈடுபாடுமே அவர்களின் உழைப்புக்கு நாம் செய்யும் மரியாதை. எங்கு இவை கிடைக்கின்றன, எப்படி இவற்றை நிறுவி இயக்குவது என்பதை அடுத்துவரும் பாகங்களில் காணலாம்.


சரி, நான் தேவையான சாப்ட்வேரெல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். என் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் தமிழ் எழுத்து சரியாய்த் தெரியுமா? இப்போதே ஒரு சில பத்திரிகைகள் படிக்க முடிவதில்லை. நிறைய ஃபான்ட் தொல்லைகள். இதுக்கு என்ன செய்வது?

அதற்கும் இப்போது வழி கிடைத்துவிட்டது. ஆங்கிலம் மட்டும் புழங்கிவந்த காலத்தில் கணினியில் தமிழைக் கொண்டுவர படாதபாடு பட்டிருக்கிறார்கள் நம் முன்னோடிகள். ஆனால் இன்றைக்கு எல்லா இடங்களிலும் தரப்படுத்துதல் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு வெளியே கணினிப் பயன்பாட்டை விரிவாக்கவேண்டிய தேவையை உணர்ந்த பல கணினியியல் அமைப்புக்கள் பல மொழிகளுக்கும் எழுத்துருக்களை தரப்படுத்தியுள்ளன. யுனிகோடு என்றழைக்கப்படும் இந்தப் புதிய தரநிர்ணயத்தில் அமைந்த பன்மொழி எழுத்துருக்கள் இன்று பல இயங்குதளங்களிலும் (ஆபரேடிங் சிஸ்டம்ஸ்) நிறுவும்போதே அல்லது வாங்கும்போதே அமைக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் பழைய இயங்குதளங்களானால் இவற்றை மேலதிக வசதிகளாக நிறுவிக்கொள்ளவும் முடிகிறது.

இதே யுனிகோடு மூலமாகத்தான் நீங்கள் படிக்கும் இந்த இ-சங்கமம் இதழும் வருகிறது. இது எந்த சிரமமும் இன்றிப் படிக்கமுடிகிறதல்லவா? எனவே இந்த ‘எழுத்துரு, குறியேற்றம்’ ஆகியவை இனியும் நம்மைப் பயமுறுத்த வேண்டியதில்லை. ‘இயங்கு எழுத்துரு’(டைனமிக் ஃபான்ட்) என்னும் தொழில்நுட்பம் இன்னும் சில யுனிகோடு வசதி இல்லாத இயங்குதளங்களிலும், அலுவலகம், பொது நூலகம் போன்ற இடங்களில் உள்ள, பயனருக்கு முழு ஆளுமை இல்லாத கணினிகளிலும் தமிழ் எழுத்துக்கள் தெரியவைக்க உதவுகிறது. நாம் இவற்றைப் பற்றியும் பின்னால் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

என்னென்னவெல்லாம் எழுதலாம்? இலக்கியமெல்லாம் எனக்கு வராதே…"

என்னவெல்லாம் நம்மைப் பாதிக்கிறதோ, என்னவெல்லாம் நம் உள்ளத்துக்கு வெளியே கொட்ட விரும்புகிறோமோ, என்னவெல்லாம் பகிர்ந்துகொண்டால் நமக்கும், வாசிப்பவருக்கும் சிறு பயனாவது இருக்குமோ, அதை எல்லாம் எழுதலாம். ஒருவர் தாம் சார்ந்த துறையைப் பற்றி எழுதலாம். தம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி, அதில் தாம் பெற்ற அனுபவங்களைப் பற்றி எழுதலாம். நம் ஊரில் தேர்தல் நடக்கிறது. சுவாரசியமான பேச்சுக்களைப்பற்றி, அவை நமக்குள் எழுப்பும் கேள்விகளைப் பற்றி, எழுதலாம். நேற்றுப் பார்த்த சினிமாவைப் பற்றி, இன்று தொலைக்காட்சியில் கண்ட கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி எழுதலாம்.

நமக்கு இலக்கிய ஆர்வம் இருப்பின் கவிதைகளை, கதைகளை எழுதி, மற்றவர்கள் விமரிசனத்துக்கு விட ஒரு வாய்ப்பாகக் கொள்ளலாம். அறிவியல், தொழில்நுட்பம் பற்றி எழுதலாம். அவ்வளவு ஏன், சுவையான ஒரு சமையல் குறிப்பு கூட, நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இதில் பதித்து, அதன் சுட்டியை மின்னஞ்சலில் அனுப்பலாம். இன்னதுதான் எழுதலாம் என்ற எல்லை இல்லாத ஒரு ஊடகம், வலைப்பதிவைப்போல இன்னொன்று கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறி.


எனக்கு நான் சொல்ல நினைப்பதை எங்கேயாவது கொட்டிவிடவேண்டும் என்று ஆசை, ஆனால் என் பெயர் வெளியே தெரியக்கூடாது, இதுக்கு இதில் வழி இருக்கா?

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? உங்களுக்கு வலைப்பதிவு ஒரு வரப்பிரசாதமுங்க! புனைபெயரில் எழுதுங்க, முகமூடிபோட்டுக்குங்க, ஒரு பயலும் டச் பண்ணமுடியாது. முக்கியமாக விமரிசனக் கட்டுரை எழுத விருப்பம் உள்ளவர்கள் வலைப்பதிவின் மூலம், விருப்பு வெறுப்பற்ற வகையில் எழுதலாம்.

சரி, நான் பாட்டுக்கு எழுதித்தள்ளுகிறேன், இதை யாராவது படிக்கிறாங்களான்னு எப்படித்தெரிஞ்சுக்கிறது?

கவலையே படாதீர்கள்! இன்றைக்கு இணையத்தொழில்நுட்பம் தரும் பலவேறு பரிசுகளில் இம்மாதிரி தகவல்களும் அடக்கம். கொஞ்சம் முயற்சித்தால், எத்தனை பேர் படிக்கிறார்கள், எந்தக் கட்டுரையை நிறையப்பேர் படித்தார்கள், என்பதுபோல பலப்பல புள்ளிவிவரங்கள் நமக்குக் கிடைக்கும். எனவே நம் பிரபலத்தை நாமே அளந்துகொள்ளலாம்.


படிக்கிறவர்கள், தான் என்ன நினைக்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லமுடியுமா?

அதுதானே வலைப்பதிவின் மிக முக்கியமான பலமே. ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியாக மறுமொழி வசதி கொடுக்கமுடியும். அதன்மூலம் ஒரு பொருளைப் பற்றிய வாசிப்பவர்களின் கருத்துக்களை சுடச்சுட அங்கேயே பதிக்க வசதி கிடைக்கிறது. இவ்வாறு ஒருவர் சொல்லும் மறுமொழியை அடுத்து வாசிப்பவர் பார்க்கக் கிடைப்பதன் மூலம் அவரும் இந்தத் தொடர் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கெடுக்கத் தூண்டுதலாகிறது. பலமுறை முதலில் எழுதப்பட்ட கட்டுரையைவிடவும் இந்த மறுமொழிச் சங்கிலிகள் சுவையாகவும் பயனுள்ளதாகவும் அமைவதைப் பார்க்கமுடிகிறது.

இதற்கு என்ன செலவாகும்?

செலவா? என்ன செலவு செய்ய நீங்கள் தயார்? பயந்துவிட வேண்டாம். பணச்செலவு என்று நீங்கள் செய்வது பூஜ்ஜியம். உங்கள் உழைப்பும், ஆர்வமும் மட்டுமே நீங்கள் செலவுசெய்ய வேண்டியவை. இதில் ஆழ்ந்துபோய் எக்கச்சக்கமாய் செய்யவேண்டும் என்று விரும்புபவர்கள் சிலசமயம் மேலதிக வசதிகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண வலைப்பதிவர் ஒரு பைசா செலவு செய்ய வேண்டியதில்லை. நம்புங்கள்!

என் எழுத்துக்களை யாரும் காப்பி அடித்துவிட்டால்?

இணையத்தில் பதிப்பிக்கப்படும் எதுவும் யாரும் எளிதில் காப்பியடிக்க ஏதுவானதுதான். எனவே இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியும். காப்பியடிக்கும் அளவுக்கு நாம் எழுதுகிறோமா என்று தெரிந்துகொள்ளவாவது இது பயன்படட்டுமே. அப்படி நம் எழுத்தின் மகிமை இருந்தால், நாமே வணிக ரீதியில் அவற்றைப் பதிப்பிக்கலாம். வார இதழ்களுக்கு எழுதலாம், சன்மானம் பெறலாம். வலைப்பதிவுகள் பெரும்பாலும், தொழில்முறை எழுத்தாளர்களின் முக்கிய வாகனம் அல்ல. ஆனால் இதுவும் மாறி வருகிறது. இன்னும் ஐந்தோ, பத்தோ வருடங்கள் கழித்து அவர்களும் வலைப்பதிவிலேயே பணம் சம்பாதிக்கலாம்…


இப்படிப் பதிப்பிப்பதால் எனக்கு எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு?

அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நம் எழுத்து உண்மையிலேயே பலரை ஈர்க்கும் ஒன்றாக இருந்தால், நம் வலைப்பதிவில் விளம்பரங்கள் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இணையத்தில் தமிழ் இன்று இருக்கும் நிலையில் இதை ஒரு சாத்தியமாக மட்டுமே இப்போதைக்குச் சொல்லமுடியும்.


இப்படி எழுதுவதால் எனக்கு ஏதும் தொல்லைகள் வருமோ?

மனதுக்குள் எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். டைரியில் என்ன வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம். ஆனால் ஒன்றைப் பொதுவில் வைக்கும்போது, அதற்கு முழுப்பொறுப்பு அதை எழுதியவருக்கு வந்துவிடுகிறது. எனவே இதைப் புரிந்து எதைத் தவிர்க்கவேண்டுமோ அதைத் தவிர்த்துவிட்டால் எந்தத் தொல்லையும் இல்லை. அதையும் மீறி பயமாக இருந்தாலோ, அல்லது சர்ச்சைக்குரிய ஒன்றை எழுதியே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாலோ இருக்கவே இருக்கிறது புனைபெயர், முகமூடி, இத்யாதி.


என்ன நண்பர்களே ஐயங்கள் தெளிந்தனவா? இனி ‘உங்களுக்கே உங்களுக்காக’ ஒரு வலைப்பதிவை செய்யலாமா? போன பாகத்தில் கொடுத்திருந்த சுட்டிகளைச் சொடுக்கி வலைப்பதிவுகளில் சிலவற்றையாவது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவை தான் தினமும் புது விஷயங்கள் கொண்டு மிளிர்கின்றனவே, இன்னும் ஒருமுறை சென்று பார்த்து வாருங்களேன்.

மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

தமிழில் எழுதலாம் வாருங்கள்

தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்

இதுவரை வந்தவை
வலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்
வலைப்பதிவுகள் - சில கேள்விகள்
ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்
வலைப்பதிவு சேவைகளும் எழுதுபொருட்களும்
நம் முதல் வலைப்பதிவு
முதல் சவால்! - எழுத்துரு

இன்னும் வரும் பாகங்கள்
மேம்படுத்தல்: இணைப்புகளும் படங்களும்
மேம்படுத்தல்: தோற்றத்தில் கொஞ்சம் தனி அடையாளம்...
மேலதிக சேவைகள்: கருத்துக் கையாளுதல்
என்னவெல்லாம் சாத்தியம்


பாகம் 1. வலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்
ஒவ்வொரு நாளும் கணினியின் உபயோகம் பரவலாகிக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக இணையம் திகழ்கிறது. தொடக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே கோலோச்சிவந்த இந்த ஊடகத்தில் இன்று அழகுத் தமிழில் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள், சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் இணையத்தின் வாயிலாக நம் திரைக்கு வந்து நம் வாசிப்புக்குத் தீனி போடுகின்றன. அதிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன.


அடுத்து, ‘வாசிப்பதெல்லாம் சரி, இது ஒரு வழிப்பாதையாக இருக்கிறதே, வாசிப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்குமா?’ என்றும் தேடுகிறோம். அந்த வாய்ப்பை மின் மடலாடற்குழுக்கள், இணைய இதழ்கள் போன்ற புதிய வடிவங்கள் ஓரளவுக்கு நமக்கு அளித்தாலும் நம் கற்பனைத்திறனை, படைப்பாற்றலை, எண்ண ஓட்டத்தினை சுதந்திரமாக வெளிப்படுத்த இவை முற்றும் பயன்தரமுடிவதில்லை.


‘என் கவிதையையோ கதையையோ பதிப்பிக்க ஏற்றதா என்பதை எப்படி ஒரு துணை ஆசிரியரோ, உதவியாளரோ தீர்மானிக்க முடியும்? வேண்டும் ஜனநாயகம்! படிப்பவர்கள் சொல்லட்டும், அது படிக்கத் தகுதியானதுதானா என்று’ என்பதுபோல நமக்குள் எண்ணங்கள் எழும்புவதும் இயற்கை. காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு என்னும்போது, நம் எழுத்து நமக்கு காவியம்தான், சத்தியவாக்குதான்.


இதன் இன்னொரு பக்கமும் இருக்கிறது. எழுதுபவர் எண்ணிக்கை அதிகமாகும்போது, யார் இந்தப் படைப்புகளை சேகரிப்பது, தரம் பிரிப்பது, மின் வடிவத்தில் இணையத்தில் ஏற்றுவது, இதற்கெல்லாம் பொறுப்பேற்பது? ஐந்து கட்டுரைகளுடனும் வரும் ஒரு இதழில் ஐம்பது கட்டுரைகள் பதிப்பிக்கமுடியுமா?


இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான், தன் படைப்புகளை தானே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் ப்லாக்கிங் (Blogging) என்றழைக்கப்படும் வலைப்பதித்தல் இன்று தமிழிலும் எளிதில் செய்ய முடிகிறது. உலகம் முழுவதிலும் இன்றைக்கு சுமார் 40 லட்சம் ப்லாக்ஸ் ( இனி நாம் வலைப்பதிவுகள் என்று அழைப்போம்) இருக்கலாம் என்று ஒரு செய்தி சொல்கிறது. இப்போதைக்கு தமிழில் சுமார் 100 வலைப்பதிவுகள் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழில் தம் எண்ணங்களை, படைப்புகளைப் பதிக்க ர்வமுள்ள ஒருவர், எந்தப் பெரிய கணினித் தொழில்நுட்ப அறிவும் தேவைப்படாமல், எந்த செலவும் செய்யாமல் இதைச் செய்ய முடியும். ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்.


உங்கள் எழுத்துக்களை மின்குதிரை மேலேற்றி உலகம் முழுமைக்கும் கொண்டுசெல்லத் தயாராகிவிட்டீர்களா? வாருங்கள், மிக அடிப்படையான கணினி அறிவு, இணையத்தொடர்பு வசதி இவை இரண்டும் மட்டும் உங்களிடம் இருக்குமானால், எப்படி உங்கள் எழுத்துக்களை, எண்ணங்களை பொன்னெழுத்துக்களால் பதிக்க முடியாவிட்டாலும், மின்னெழுத்துக்களால் பதிக்கலாம் என்பதை இங்கு எளிய விளக்கங்களுடன் தெரிந்துகொள்ளலாம்.


இன்னேரம் உங்களுக்குள் சில கேள்விகள் தோன்றியிருக்கவேண்டுமே. இதோ உங்கள் மனதில் கிளம்ப வாய்ப்பிருக்கக்கூடிய கேள்விகளில் சில:


சிலர் சொந்தமாக வலைப்பக்கம் (homepage) வைத்திருக்கிறார்களே, அதற்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?
ஓரளவுக்கு கணினி அறிவு வேண்டும் என்றால், எந்த அளவுக்கு?
தமிழில் தாளில் எழுதத் தெரியும். தட்டச்சு செய்யத்தெரியாது, அப்படியே தெரிந்தாலும் தமிழ் கீபோர்ட், சாப்ட்வேர் எல்லாம் வேண்டுமே எங்கே போவது?
சரி, நான் தேவையான சாப்ட்வேரெல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். என் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் தமிழ் எழுத்து சரியாய்த் தெரியுமா? இப்போதே ஒரு சில பத்திரிகைகள் படிக்க முடிவதில்லை. நிறைய பான்ட் தொல்லைகள். இதுக்கு என்ன செய்வது?
என்னென்னவெல்லாம் எழுதலாம்? இலக்கியமெல்லாம் எனக்கு வராதே…
எனக்கு நான் சொல்ல நினைப்பதை எங்கேயாவது கொட்டிவிடவேண்டும் என்று ஆசை, ஆனால் என் பெயர் வெளியே தெரியக்கூடாது, அதுக்கு இதில் வழி இருக்கா?
சரி, நான் பாட்டுக்கு எழுதித்தள்ளுகிறேன், அதை யாராவது படிக்கிறாங்களான்னு எப்படித்தெரிஞ்சுக்கிறது?
படிக்கிறவர்கள், தான் என்ன நினைக்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லமுடியுமா?
இதற்கு என்ன செலவாகும்?
என் எழுத்துக்களை யாரும் காப்பியடித்துவிட்டால்?
இப்படிப் பதிப்பிப்பதால் எனக்கு எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு?
இப்படி எழுதுவதால் எனக்கு ஏதும் தொல்லைகள் வருமோ?
இதற்கெல்லாம் விடை தெரிந்துகொள்ளும் முன் தமிழில் உள்ள வலைப்பதிவுகள் சிலவற்றை நீங்கள் பாருங்கள். இவை இன்னும் வளர்ந்து வரும் வடிவத்தின் முதல் வார்ப்புகள், எனவே இவற்றை எவ்விதத்திலும் உங்கள் கற்பனைக்கோ ஆர்வத்துக்கோ எல்லையாகக் கொள்ளவேண்டியதில்லை. ஒரு புரிதலுக்காக மட்டுமே.

இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பதிவுகளைப் பார்க்கலாம்:


http://nizhalkal.blogspot.com/
http://sundaravadivel.rediffblogs.com/
http://emadal.blogspot.com/


அரசியல், சமூகம் பொருளாதார கருத்துகளுக்கு சில மாதிரிகள்:
http://thoughtsintamil.blogspot.com/
http://writerpara.blogspot.com/
http://www.ntmani.blogspot.com/


அறிவியல், தொழில்நுட்பம், கணினி மென்பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு:
http://www.tamillinux.org/venkat/myblog/
http://kuruvikal.blogspot.com/
http://aayutham.blogspot.com/


கிண்டல், கேலி, நகைச்சுவைக்கு:
http://peyarili.blogdrive.com/
http://vimosanam.blogdrive.com/
http://idlyvadai.blogspot.com/


ஆன்மிகம், கலாசாரம் சார்ந்த பதிவுகளுக்கு:
http://uyirppu.blogdrive.com/
http://alwar.log.ag/
http://vamadevan.blogdrive.com/


வாழ்க்கை அனுபவங்கள், பயணக்கட்டுரைகள் படிக்க வேண்டுமா?
http://subaonline.blogdrive.com/
http://ninaivu.blogdrive.com/
http://subaillam.blogdrive.com/


இன்னும் பல்சுவையும் கலந்து அளிக்கும் சில பதிவுகளையும் பார்க்கலாம்:
http://etamil.blogspot.com/
http://meenaks.rediffblogs.com/
http://pari.kirukkalgal.com/


இதையெல்லாம் இங்கே கொடுத்ததால் இத்தோடு நின்றுவிடவேண்டியதில்லை. தமிழில் இருக்கும் வலைப்பதிவுகளின் பட்டியலைப் பார்க்க இதோ சுட்டி.
http://tamilblogs.blogspot.com/


இதில் இன்னும் பல வலைப்பதிவுகளையும் காணலாம். இப்போதைக்கு இந்தப் பதிவுகளைப் பார்த்து, படித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று சிந்தித்து வையுங்கள். மேற்கொண்டு அடுத்த இதழ்களில் மேலே சொன்ன கேள்விகளுக்கு விடையும், நீங்களே சொந்தமாக வலைப்பதிக்க என்ன செய்யவேண்டும் என்றும் பார்க்கலாம்.

நாங்க ரெடி, நீங்க ரெடியா?
முகப்புப் பக்கத்துக்கு மீள...|அடுத்த பாகத்துக்குச் செல்ல...

வலைப்பதிவு

வலைப்பதிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுவதற்குமென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களை காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்கு தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.


பொருளடக்கம் [மறை]
1 வலைப்பதிவுகளின் பொதுவான இயல்புகள்
1.1 அடிக்கடி இற்றைப்படுத்தப்படல்
1.2 இலக்கு வாசகர்கள்
1.3 வாசகர் ஊடாட்டம்
1.4 செய்தியோடை வசதி
2 வலைப்பதிவொன்றின் பகுதிகள்
2.1 வலைப்பதிவுத் தலைப்பு
2.2 விபரிப்பு/சுலோகம்
2.3 பதிவின் தலைப்பு
2.4 பதிவு/உள்ளடக்கம்
2.5 பின்னூட்டங்கள்
2.6 பதிவுகளுக்கான தனிப்பக்கங்கள்
2.7 சேமிப்பகம்
2.8 தொடுப்புக்கள்
2.9 மேலதிக நிரற் துண்டுகள்
3 வலைப்பதிவோடு தொடர்புடைய தமிழ்க் கலைச்சொற்கள்
4 வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்குமான வேறுபாடுகள்
5 வலைப்பதிவின் வரலாறு
6 வெளி இணைப்புக்கள்
6.1 திரட்டிகள்
6.2 பட்டியல்கள்
6.3 வலைப்பதிவு சேவை வழங்குநர்கள்
6.4 வலைப்பதிவு பற்றிய தமிழ் கட்டுரைகள்
6.5 தமிழில் எழுத உதவும் கருவிகள்
6.6 வேறு
[தொகு] வலைப்பதிவுகளின் பொதுவான இயல்புகள்

[தொகு] அடிக்கடி இற்றைப்படுத்தப்படல்
பெரும்பாலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றுக்குமான பொது இயல்பாக அவை அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதைச் சொல்லலாம். புதிய பதிவுகளை, ஆக்கங்களை அடிக்கடி வலைப்பதிவாளர்கள் தம் வலைப்பதிவுகளில் வெளியிடுவர். சில வலைப்பதிவுகள் தனி நபர்களின் சொந்த நாட்குறிப்பேடுகளாகக்கூட உள்ளன.


[தொகு] இலக்கு வாசகர்கள்
அநேகமான வலைப்பதிவுகள், வாசகர்களை இலக்காகக்கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுகளுக்கும் சிறப்பான ஒரு வாசகர் வட்டம் இருக்கும்.


[தொகு] வாசகர் ஊடாட்டம்
தொழிநுட்ப ரீதியாக வாசகர் ஊடாடுவதற்கென வலைப்பதிவுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களை பின்னூட்டங்களாக உடனடியாகவே அவ்வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். பின்னூட்டங்களை அடுத்து வரும் வாசகர்கள் பார்க்கக்கூடியதாயிருக்கும். தேவையேற்படும்பட்சத்தில் பின்னூட்டங்கள் விடயத்தில் வலைப்பதிவாளர் மட்டுறுத்தல்களையும் மேற்கொள்ள முடியும்.


[தொகு] செய்தியோடை வசதி
வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப்பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக்கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம். இச்செய்தியோடை வசதியே, வலைப்பதிவுத் திரட்டிகளையும், வலைப்பதிவர் சமுதாயங்களையும் சாத்தியப்படுத்தியுள்ளது.


[தொகு] வலைப்பதிவொன்றின் பகுதிகள்
வலைப்பதிவொன்றில் பொதுவாக இருக்கக்கூடிய பகுதிகள் அல்லது உறுப்புக்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.


[தொகு] வலைப்பதிவுத் தலைப்பு
வலைப்பதிவுகள் தமக்கென பெயரொன்றைக் கொண்டிருக்கும். இப்பெயர் வலைப்பதிவின் உள்ளடக்கம் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்கு சில வேளைகளில் கொடுக்கக்கூடும். பெரும்பாலும் வித்தியாசமான, கவரத்தக்க தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன.


[தொகு] விபரிப்பு/சுலோகம்
வலைப்பதிவர், தனது வலைப்பதிவு பற்றியோ, அதன் நோக்கங்கள் பற்றியோ விபரிக்கும் ஓரிரு சொற்களை அல்லது வரிகளை இது கொண்டிருக்கும். சிலவேளை, விளையாட்டாக, நகைச்சுவைக்காகக்கூட இது எழுதப்பட்டிருக்கும். வலைப்பதிவர் விரும்பும் வாசகமொன்றாகக்கூட இது அமையலாம்.


[தொகு] பதிவின் தலைப்பு
ஒவ்வொரு பதிவும் (அல்லது பிரசுரிக்கப்படும் ஆக்கங்களும்) தலைப்பொன்றினைக் கொண்டிருக்கும். வலைப்பதிவுத் திரட்டிகளில் உறுப்பினராக உள்ள வலைப்பதிவர்கள், இத்தலைப்புக்களை மிக கவர்ச்சிகரமாகவும், பதிவின் உள்ளடக்கத்தை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தும் விதமாகவும் அமைப்பர்.


[தொகு] பதிவு/உள்ளடக்கம்
இதுவே வலைப்பதிவில் அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் பகுதியாக இருக்கும். இவ்வுள்ளடக்கம் எழுத்தாக்கமாகவோ, ஒலி வடிவமாகவோ, சலனப்படக் காட்சியாகவோ, படமாகவோ அமையலாம். இவ்வுள்ளடக்கம் இணையத்தின் பொதுவான உள்ளடக்கங்களைப் போன்று மீயுரை வடிவங்களுக்கே உரித்தான பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கலாம்.


[தொகு] பின்னூட்டங்கள்
பதிவின் உள்ளடக்கத்தைப் படிக்கும் வாசகர்கள் வலைப்பதிவொன்றில் பதிவுசெய்த பின்னூட்டங்கள் இங்கே காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள பின்னூட்டங்களோடு, புதிதாக பின்னூட்டம் இடுவதற்கான தொடுப்பும் அங்கே இருக்கும்.


[தொகு] பதிவுகளுக்கான தனிப்பக்கங்கள்
வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படும் பதிவு/பதிவுகளை விட, ஒவ்வொரு பதிவுக்கென்றும் தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அப்பதிவுகளுக்கான பின்னூட்டங்களும் அப்பக்கங்களில் காண்பிக்கப்பட்டிருக்கும். அனைத்துப் பக்கங்களும் தமக்கெனத் தனியான முகவரிகளைக் கொண்டிருக்கும். இப்பக்கங்கள் வலைப்பதிவொன்றின் முகப்பில் தொடுப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக அண்மையில் எழுதப்பட்ட பத்து அல்லது இருபது பதிவுகளின் தொடுப்புக்கள் தலைப்புக்களோடு முகப்பில் பட்டியலிடப்பட்டிருப்பதை வலைப்பதிவுகளில் காணலாம்.


[தொகு] சேமிப்பகம்
வலைப்பதிவு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தபட்டு வருவதால், முன்னர் எழுதிய பதிவுகள் முகப்புப்பக்கத்தில் இடம்பெறாமலோ, பட்டியலிடப்படும் தனிப்பக்கங்களில் கூட இடம்பிடிக்காமலோ போகலாம். அவற்றை வாசகர்கள் பார்ப்பதற்கும், வலைப்பதிவொன்றின் அத்தனை ஆக்கங்களும் பட்டியலிடப்படுவதற்கும் இத்தகைய சேமிப்பகங்கள் உதவுகின்றன. சேமிப்பகம் ஓர் அவிழ் பட்டியலாகவோ தனிப்பக்கமாகவோ, சாதாரண பட்டியலாகவோ இருக்கலாம். சேமிப்பகத்தில் பதிவுகள் மாதவாரியாகவோ, வார வாரியாகவோ பட்டியற்படுத்தப்பட்டிருக்கலாம்.


[தொகு] தொடுப்புக்கள்
வலைப்பதிவாளரது விருப்பங்களுக்கேற்ப, வெளி இணையத்தளங்களுக்கான தொடுப்புக்கள் வலைப்பதிவொன்றில் கொடுக்கப்பட்டிருக்கும்.


[தொகு] மேலதிக நிரற் துண்டுகள்
வலைப்பதிவாளரது நிரலாக்க அறிவு, தேவை என்பவற்றைப் பொறுத்து பல சிறப்பான பணிகளை ஆற்றக்கூடிய நிரல் துண்டுகள் வலைப்பதிவொன்றில் சேர்க்கப்பட்டிருக்கலாம். வருனர்களின் எண்ணிக்கையை அறியவோ, அல்லது எழிலூட்டுவதற்காகவோ இவை பொருத்தப்பட்டிருக்கலாம்.

சிறந்த எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், தமது வலைப்பதிவிலே அத்திரட்டியினால் வழங்கப்படும் சிறப்புப் பட்டை ஒன்றினைப் பொருத்தியிருப்பர்.


[தொகு] வலைப்பதிவோடு தொடர்புடைய தமிழ்க் கலைச்சொற்கள்
வலைப்பதிவு
வலைப்பதிவாளர்/வலைப்பதிவர் - வலைப்பதிவொன்றை வைத்திருந்து இற்றைப்படுத்துபவர்
வாசகர் - வலைப்பதிவினைப் பார்வையிடுபவர்
பின்னூட்டம்/கருத்து - வாசகரால் வலைப்பதிவின்மீது செய்யப்படும் கருத்து வழங்கல்கள்.
செய்தியோடை - newsfeed - இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் பரிமாற உதவும் xml முகவரி
தட்டெழுதல் - வலைப்பதிவுகளை விசைப்பலகை கொண்டு உள்ளிடுதல். "தட்டச்சு செய்தல்" என்ற பழைய சொல்லின் தொழிநுட்பரீதியான மருவல்.
நிரலாக்கம் - ஆணைத்தொடர்களை எழுதுதல்
நிரல் துண்டு - சிறப்பான தேவைகளுக்கென வலைப்பதிவொன்றில் பொருத்தப்படும் மேலதிக ஆணைத்தொடர். அநேகமாக ஜாவாஸ்க்ரிப்ட், HTML,XMl ஆக இருக்கலாம்
வார்ப்புரு - template - வலைப்பதிவொன்றின் அத்தனை செயற்பாடுகளையும் கவனித்துக்கொண்டு, பின்னணியிலுள்ள php போன்ற வழங்கிசார் நிரலுடன் தொடர்புகளைப்பேணி வலைப்பதிவை ஆக்கும் சட்டகம்.இது css எழிலூட்டு நிரல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். வார்ப்புருவை மாற்றியமைப்பதன்மூலம் வலைப்பதிவொன்றின் வடிவத்தையும் செயற்பாடுகளையும் மாற்றியமைக்கலாம்.
திரட்டி - வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை ஓரிடத்தில் திரட்டி, இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் காண்பிக்கும் வலைத்தளம்.
வலைப்பதிவர் சமுதாயம் - திரட்டிகளோடு இணந்து தம்முள் இடைத்தொடர்புகளைப் பேணும் வலைப்பதிவர்கள்.
மட்டுறுத்தல் - பின்னூட்டங்களைப் பரிசீலித்து தேவையானவற்றை மட்டும் வலைப்பதிவில் தோன்றச்செய்தல் (எல்லாவகையான "பரிசீலிப்பின் பின்னான பிரசுரிப்பும்" இதனுள் அடக்கம்
பதிவிடல் - உள்ளடக்கத்தினை வலைப்பதிவொன்றில் பிரசுரித்தல்.
பெயரிலி/முகமூடி - தன்னை அடையாளப்படுத்தாது பின்னூட்டங்கள் இடுபவர். தமிழ் வலைப்பதிவர் சமுதாயத்தில் பொதுவாகிப்போன சொற்கள்.(இப்பெயர்களை சில வலைப்பதிவாளர்கள் தமக்கு வைத்துக்கொண்டுள்ளனர்.)
வழங்கி - வலைப்பதிவுகளுக்குத் தேவையான கோபுக்களை வைத்திருந்து இணையத்திற்குப் பரிமாறும் சிறப்புக் கணினி.
வலைப்பதிவர் சந்திப்பு - வலைப்பதிவர்கள், தமது வலைப்பதிவர் அடையாளத்தை முன்னிறுத்தி கூடுதல்.
கூட்டுப்பதிவு/கூட்டு வலைப்பதிவு - ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பராமரிக்கப்படும் வலைப்பதிவுகள்.
இடுகை - வலைப்பதிவில் உள்ளடக்கம் ஒன்றினை இடும் செயல் (வினை). வலைப்பதிவொன்றில் உள்ளிடப்பட்ட உள்ளடக்கம் (பெயர்)
பின்தொடர்தல் - குறித்த இடுகை சார்ந்து எழுதப்படும் பின்னூட்டங்கள், வெவ்வேறு இடங்களில் அதைத்தொட்டு எழுதப்படும் விடயங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் கணினியில் மென்பொருட்களின் உதவியுடன் தெரிவிக்கும் வசதி.
வலைப்பூ - வலைப்பதிவு ஆரம்பமான காலத்தில் உருவாக்கப்பட்ட கலைச்சொல். இது வலைப்பதிவையே குறிக்கும். வலைக்குறிப்பு, வலைக்குடில் போன்ற சொற்களும் வழக்கத்திலிருந்தன. தற்போது வலைப்பதிவு என்பதே பொதுச்சொல்லாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

[தொகு] வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்குமான வேறுபாடுகள்

தமிழ் வலைப்பதிவுத் திரட்டி ஒன்று... வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் ஓரிடத்தில் திரட்டப்படுதலைக் காண்க... நன்றி: தமிழ் மணம் திரட்டி்




வலைப்பதிவுகளில், புதிய வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் இலகுவானது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உள்ளிட்டுவிட்டு இலகுவாக ஒரு விசை மூலம் சமர்ப்பித்துவிட்டால் தானாக பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் இந்தப் பணியைச் செய்துமுடிக்கின்றன.
வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைபப்திவிலேயே பதிவு செய்யும் வசதிகள் உண்டு.
வலைப்பதிவுகள் செய்தியோடையைப் பயன்படுத்தி பெரும் சமுதாயமாக திரட்டி ஒன்றினைச்சுற்றி உருவாகிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
நிறுவனங்கள் வலைப்பதிவுகளை வைத்திருப்பதற்கான இடவசதியையும் வார்ப்புருக்களையும் மின்னஞ்சல் போன்று இலவசமாகவே வழங்குவதால், வழங்கி, ஆள்களப்பெயர் போன்றவற்றுக்கு எந்தவிதமான கட்டணங்களும் செலுத்தவேண்டியதில்லை.
தேடுபொறிகள் தமக்கென தனியான வலைப்பதிவுத் தேடல்களை வைத்திருப்பதாலும், வலைப்பதிவுகள் எல்லாம் பெரும் வலையமைப்புடன் இணைந்திருப்பதாலும் சில நாட்களிலேயே வலைப்பதிவு உள்ளடக்கங்கள் தேடுபொறிகளில் பட்டியலிடப்பட்டுவிடும்.
செய்தியோடை வசதி, தன்னியக்க ஒழுங்குபடுத்தல்களுக்கான நிரலாக்கம் எல்லாம் சேவை வழங்குநர்களாலேயே பெரும்பாலும் தரப்பட்டுவிடுவதால், பராமரிப்பதற்கோ, உருவாக்குவதற்கோ கணினி இயல் அறிவு பெரிதாகத் தேவைப்படாது.

[தொகு] வலைப்பதிவின் வரலாறு
இக்கட்டுரை பிழையான தகவல்களை கொண்டிருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும்.
விக்கிபீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து சீர் செய்வது குறித்து இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம்.

WebLog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 இல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.
குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் WebLog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.
1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.
1996 இல் 'Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டிவிட்டது.
ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.
முதல் தமிழ் வலைப்பதிவாளராய் கார்த்திகேயன் இராமசுவாமி கருதப்படுகிறார். இவரது முதல் தமிழ் இடுகை ஜனவரி 01 2003 இல் இடப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

[தொகு] வெளி இணைப்புக்கள்

[தொகு] திரட்டிகள்
தமிழ்மணம்
தேன்கூடு
கில்லி
தமிழ்ப் பதிவுகள்

[தொகு] பட்டியல்கள்
தமிழ் வலைப்பதிவுகளின் வலைப்பதிவு
(நவம்பர் 2005 வரையிலான தொகுப்பு. தற்போது இற்றைப்படுத்தப்படுவதில்லை)


[தொகு] வலைப்பதிவு சேவை வழங்குநர்கள்
Wordpress
Tamil Blogs
Blogger(Blogspot)
Blogsome

[தொகு] வலைப்பதிவு பற்றிய தமிழ் கட்டுரைகள்
அச்சிதழ்களின் அதிகாரம் -வலைப்பதிவுகளின் வருகை - மு.மயூரன்
ஒரு தமிழ் மணத்தின் உதிர்வு -மு.மயூரன்
வலைப்பதிவராய் ஒரு வருடம் -நவன் பகவதி
நியூக்ளியஸ் வலைப்பதிவு - சில யோசனைகள் - முஃப்தி
தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்
எம்.எஸ்.என் .காமில் வலைப்பூ பற்றிய அறிமுகக் கட்டுரை
தமிழ்மணம் கேள்வி-பதில் - இளா

[தொகு] தமிழில் எழுத உதவும் கருவிகள்
எ-கலப்பை பதிவிறக்கம்
தகடூர் தமிழ் எழுதி்
IIT தமிழ் எழுதி்
புதுவை தமிழ் எழுதி்

[தொகு] வேறு
தமிழ் வலைப்பதிவு விக்கி
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பக்க வகைகள்: தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகள் | கணினியியல் | இணையம் | வலைப்பதிவு